பகவான் சாயிநாதரின் தனித்துவம்

பகவான் சாயிநாதரின் தனித்துவம்
இறைவனின் அவதாரங்கள் எல்லாமே விசேஷமானவைதான் என்றாலும் பாபாவின் அவதாரம் மிகவும் விசேஷம் பெற்றதாகும். இராமர், கிருஷ்ணர் அவதாரங்களில் அவர்கள் பல இடங்களுக்கும் சென்றார்கள். அதேபோல் ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் போன்ற மகான்கள் பாரத தேசம் முழுவதும் பயணித்து பாரத மக்களுக்கு நன்மைகளைச் செய்தார்கள்.
ஆனால் சாய்பாபா ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக சீரடியை விட்டு எங்கும் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே பலரைத் தன் இருப்பிடத்திற்கு இழுத்து அருள் புரிந்து தம் அவதார நோக்கினை நிறைவு செய்தார். இதனால் பாபாவின் அவதாரம் மிகச் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது.
பாபா பல பக்தர்களின் கனவில் தோன்றியும் பல மகான்கள் மூலமாகவும், தன்னைக் வெளிப்படுத்திக் கொண்டார்.
பலரின் வாழ்க்கையையும் மாற்றிய பாபாவின் வரலாற்றில் மேகா எனும் பக்தனின் வாழ்க்கை பலருக்கும் பாடமாக அமைந்தது. ராவ்பகதூர் ஹரி விநாயக்ஸாடே என்பவரின் பிராமண சமையல்காரன் மேகா. இவன் சாஸ்திரங்களையோ, புராணங்களையோ படித்தவனில்லை. ஆனால் சிவன் மேல் மிகுந்த பற்றும், பக்தியும் கொண்டவன். வேறு தெய்வங்களை சிந்திக்கக் கூட மறுப்பவன். இத்தகைய மேகாவை அவனின் முதலாளி சாய்பாபாவிடம் செல்லுமாறு பணித்தார்.
முதலில் மறுத்த மேகா, வேறு வழியில்லாமல் சீரடி செல்ல ஒப்புக் கொண்டு புறப்பட்டான். வழியில் அவன் சந்தித்த சிலர் “சீரடி சாய்பாபா ஒரு முகமதியர், பிராமணனான நீ அவரை வழிபடச் செல்லலாமா’ எனக்கேட்டு அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்கள். எனவே மேகா பாதி வழியில் பாபாவிடம் செல்லாமலே முதலாளியிடமே திரும்பி விட்டான்.
சிறிது நாட்கள் கழித்து பின் முதலாளி ஸாடே சீரடி புறப்படுமாறு கூறினார். அதற்கு மேகா “ஒரு முகமதியரை வணங்க என்னை அழைக்காதீர்’ என்றான். அப்போது ஸாடே, “மேகா நீ நினைப்பது போல் பாபா முகமதியர் அல்ல, அவரே பரம்பொருள். உன் நன்மையின் பொருட்டே என் மூலம் உன்னை அழைக்கிறார் மறுக்காதே’ என்று கூறி சீரடியில் இருக்கும் தனது மாமா கணேஷ் தாமோதருக்கு பாபாவிடம் அறிமுகப்படுத்துமாறு கடிதம் கொடுத்து அனுப்பினார்.
முழுமனதுடன் இல்லாவிட்டாலும் மேகா சீரடி சென்றான். தமோதருடன் மசூதிக்குள் நுழைந்த மேகாவை பாபா கோபமாகத் திட்டி, பிராமணனான உனக்கு முகமதியனிடம் என்ன வேலை என்றும் கேட்டார். அதனால் மேகா பாபாவைச் சந்திக்காமல் சிறிது நாள் சீரடியில் தங்கிய பின் “திரியம்பகேஸ்வரம்’ சென்று விட்டான்.
திரியம்பகேஸ்வரத்தில் தங்கிய மேகாவிற்கு பாபாவின் நினைவே வந்து சென்றது. பல நாள் முயற்சித்தும் பாபாவின் நினைவே தொடர்ந்ததால் பாபாவைச் சந்திக்க சீரடி திரும்பினான். பாபாவின் அடியவர் தாதா கேல்கர் மேகாவிற்காகப் பரிந்து பேசி பாபாவிடம் அனுமதி பெற்றார். பக்குமடைந்து திரும்பிய மேகாவை பாபா புன்னகையோடு வரவேற்றார்.
பின்னர் கண்களாலேயே மேகாவை மன அமைதிகொள்ள வைத்தார். நயன தீட்சை பெற்ற மேகாவிற்கு அவன் கண்களையே நம்பமுடியவில்லை! ஆம், அவன் எதிரில் பாபா இல்லாமல் பரமசிவனே அமர்ந்திருந்தார். கண் முன் சிவனைக் கண்ட மேகா சத்தியத்தினை உணர்ந்தவனாய் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.
பின்னர் பாபாவின் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்தவனாய், தினந்தோறும் பணிவிடைகள் செய்து பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து அத்தீர்த்தத்தினைப் பருகினான். தான் வணங்கும் இறைவனான சாய்சிவனை விட்டு எங்கும் பிரிவதில்லை என்று சங்கல்பித்துக் கொண்டவனாய், மேகா சிவ பூஜைக்கு வேண்டிய வில்வஇலைகளை வெகுதூரம் சென்று பறித்து வந்து பாபாவிற்கு பூஜை செய்தான்.
இருப்பினும் அதற்கு முன் சீரடியில் இருந்த கண்டோபா கோயிலுக்குச் சென்று வருவதையும் வழக்கமாகக் கொண்டான்.
பாபா அனைத்தும் அறிந்தவராய் மேகாவின் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் ஏதோ காரணத்திற்காகக் கண்டோபா கோயில் திறக்கவில்லை. இருந்தபோது மேகா தன் கடமையைச் செய்ய மசூதிக்கு வந்தான்.
மேகா உள்ளே வந்தவுடன் பாபா அவனிடம் மேகா நீ இப்போ கண்டோபா கோயிலுக்கு போய்விட்டு வா’ என்றார். பாபாவின் முன் மறுப்பு என்பதையே அறியாதிருந்த மேகா கண்டோபா கோயிலுக்கு வந்தான். என்ன ஆச்சர்யம் தற்போது கோயில் திறந்திருந்தது! பாபாவே சிவன், சிவனே பாபா என்ற நிலைப்பாட்டில் மேலும் உறுதி கொண்ட மேகா சிவனுக்குப் பிடித்த கங்கை நீர் அபிஷேகம் செய்ய விரும்பினான்.
ஆனால் பாபா பல முறை மறுத்தார். காரணம் சீரடி மக்கள் 15 கி.மீ. தொலைவில் இருந்த கோமதி நதியையே கங்கையெனப் போற்றினார்கள். மேகா அவ்வளவு தொலைவு சென்று வர வேண்டுமே என்று பக்தன் மேல் கொண்ட அன்பினால் பாபா மறுத்தார். ஆனால் மேகாவின் வற்புறுத்தல் அதிகரிக்கவே மகரசங்கராந்தி அன்று அபிஷேகத்திற்கு ஒப்புக் கொண்டார். மேகா மிகுந்த சிரமப்பட்டு பல குடங்களில் நீரைச் சேகரித்து கொண்டு வந்தான்.
அபிஷேகம் ஆரம்பிக்கும் போது பாபா சொன்னார் “மேகா எண் ஜான் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் எனவே தலையில் மட்டும் நீரினை ஊற்று’ என்றார். கூடியிருந்த மக்களின் ஆரவாரத்தோடு அபிஷேகம் தொடங்கியது.
பாபாவிற்கு அபிஷேகம் செய்யும் ஆனந்தத்தில் இருந்த மேகா உடலிலும் நீரை ஊற்றினான். என்ன ஆச்சர்யம் துளி நீர் கூட உடலின் பகுதியை நனைக்கவில்லை! சிரசில் பட்டே சிதறின. மேகாவும் மக்களும் பாபாவின் லீலையில் தங்களை மறந்து பணிந்தார்கள்.
ஒருநாள் மேகாவின் கனவில் தோன்றிய பாபா வாடாவில் வைத்து வணங்கும் தன் படத்திற்குப் பின் திரிசூலம் ஒன்றை வரையுமாறு கூறி சில அக்ஷதைகளைத் தூவியும் ஆசிர்வதித்தார்.
விழித்தெழுந்த மேகா பூட்டிய அறையில் அக்ஷதைகள் சிதறியிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் கொண்டு பாபாவிடம் நேரில் விளக்கம் கேட்டான். அதற்கு பாபா “நான் பக்தனைக் காண வேண்டும் என்று நினைத்தாலோ காக்க வேண்டும் என்று நினைத்தாலோ எனக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. எனக்கென்று தனி உருவமோ வடிவமோ கிடையாது. எங்கும் எதிலும் தோன்ற முடியும்’ என்றார். “என்னை நம்பிச் செயல்படும் எல்லோர் செயல் முன் நின்றும் நான் காப்பேன்’ என்றும் கூறினார். பாபாவின் ஆணைப்படியே மேகா சூலம் வரைந்து வைத்தான்.
மறுநாள் திரிசூலத்திற்கு ஏற்றதான ஒரு சிவலிங்கத்தை பூனாவைச் சேர்ந்த ராம்தாசி என்பவர் மூலம் கிடைக்கச் செய்தார். பல ஆண்டுகள் மன அமைதியுடன் வாழ்ந்த மேகா பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்தார். மேகா ஒரு நல்ல நாளில் சிவபதவி அடைந்தார். அன்று பாபா மிகுந்த துக்கம் கொண்டவராய் இருந்ததோடு மேகாவின் உடலுக்கு மலரஞ்சலியும் செய்தார்.
பின்னர் பக்தர்களிடம் அவன் உண்மையான பக்தன் என்றும் கூறிவிட்டு பத்தாம்நாள் தம் செலவில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தார்.
தன்னை சந்திக்கக்கூட மறுத்த ஒருவனை வாழ்நாள் முழுவதும் தன்னுடனே வைத்துக் கொண்ட பாபாவின் செயல் ஆச்சர்ய மானதுதானே!
குருவை அடைய வேண்டும், சந்திக்க வேண்டும், ஆசி பெற வேண்டும் என்ற உண்மையான ஆதங்கமும், தவிப்பும் ஒருவரிடம் இருந்தால் அதற்கான உபாயங்களை குருவே செய்வார் என்பதற்கு உதாரணமாக காகாஜி வைத்யாவின் வாழ்க்கை அமைந்துள்ளது.
நாசிக் ஜில்லாவில் உள்ள வணி எனும் ஊரில் இருந்த ஸ்ரீஸப்தச்ருங்கிதேவி ஆலயத்தில் காகாஜி என்பவர் பூஜை செய்து வந்தார். அவருக்கு திடீரென மனக்குறை ஏற்பட்டது. தக்க குருவை அடைந்து மன அமைதி கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கான வழி தெரியாமல் தவித்தார்.
முடிவில் தான் வணங்கும் தேவியிடமே தக்க குருவைக் காட்டுமாறு கேட்டார். கனவில் தோன்றி தேவி சிவனின் வடிவாய் விளங்கும் பாபாவை வணங்கு என்றார்.
கனவில் சரியாகப் புரிந்து கொள்ளாத காகாஜி, திரியம்பகேஸ்வரம் சென்று சிவபூஜை செய்து வந்தார். வேண்டிய மன அமைதி கிடைக்காததால் வணிக்கே திரும்பினார். மீண்டும் தேவியிடம் முறையிட்ட போது தேவி “காகாஜி உன்னை சீரடி சாய் பாபாவிடம் தானே போகச் சொன்னேன்’ என்றார். மேலும் “நீ கவலைக் கொள்ளாதே நல்லபடியாக எல்லாம் நடக்கும்’ என்றும் ஆசிர்வதித்தாள்.
அதே நேரத்தில் சீரடியில் பாபாவின் அடிப்பொடியாக, பாபாவே சகலமும் என எண்ணி வாழும் சாமா, பாபாவின் முன் வெள்ளியிலான இரு மார்பகங்களை வைத்து இதை ஏற்றுக் கொண்டு குல தெய்வத்தின் கோபத்திலிருந்து காக்குமாறு வேண்டினார். சகலமும் அறிந்த பாபா ஏதும் அறியாதவர் போல் வெள்ளியின் விருத்தாந்தத்தை விளக்குமாறு கோரினார்.
பாபாவின் முன் எதையும் மறைத்தறியாத சாமா ஜோதிடர் மூலம் அறிந்து கொண்டதைக் கூறினார். சாமா சிறுவனாய் இருந்த போது உடல் நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. நெடுநாள் வரை குணமாகாததால் சாமாவின் தாயார் தங்கள் குலதெய்வமான சப்தசிருங்கி தேவியிடம் தன் மகனை அவரது காலடியில் சேர்ப்பதாக வேண்டிக் கொண்டார். குணமானபின் நாளடைவில் மறந்து விட்டார். பின்னர் சில வருடங்கள் கழித்து சாமாவின் தாயாருக்கு மார்பில் பிரச்சனை ஏற்பட்டது.
தற்போதும் குலதெய்வத்திடம் இரு வெள்ளியிலான மார்பகத்தைக் காணிக்கையாகச் சேர்ப்பதாக வேண்டிக் கொண்டார். பாபா நினைத்திருந்தால் ஸப்தச்ருங்கி தேவியாகக் காட்சி தந்து அந்தக் காணிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் தன் பக்தன் ஒருவன் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் சாமாவின் வேண்டுதலை ஏற்க மறுத்தார். அத்துடன் உடனே வணி சென்று தாயின் வேண்டுதலை நிறைவேற்றுமாறு வற்புறுத்தினார் பாபா.
பாபாவிடம் உதிபெற்றுக்கொண்ட சாமா உடனே வணிக்குப் புறப்பட்டார்.
விலைமிகுந்த பொருளைத் தொலைத்த ஏழைபோலவும், மழைக்காக வேண்டி நிற்கும் விவசாயி போலவும், தவித்துக் கொண்டிருந்தார் காகாஜி. வணி சென்றடைந்த சாமா, தேவியிடம் சென்று தனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியனார். அத்துடன் தனது தாயின் சார்பாகவும் மன்னிப்பினைக் கோரினார்.
பிரார்த்தனைகள் முடிந்த பின் காகாஜிடம் தன்னை அனுப்பிய பாபாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது காகாஜி கண்களில் கண்ணீர் வடிய “பாபாவின் அடியவரான தாங்கள் இந்த அடிமையையும் அவரிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்று’ வேண்டினார். காகாஜியின் பக்தியை உணர்ந்த சாமா, சீர்டிக்கு தேவியின் அனுமதியோடு சீரடிக்கு அழைத்துச் சென்றார்.
சீரடி வந்தடைந்த காகாஜி, பாபாவின் பாதங்களைப் பணிந்து கண்ணீரால் அபிஷேகம் செய்தார். பணிந்த நொடியில் மன அமைதி பெற்றவராய் கண்ணீர் பெருக பாபாவைப் பார்த்துக் கொண்டே இருந்தார். கேள்வி பதில் எதுவும் இல்லாமல் அங்கே நீண்ட உபதேசம் நடந்து கொண்டிருந்தது.
ஆதிசங்கரர் தமது ஸ்லோகத்தில் தட்சிணாமூர்த்தி, சிஷ்யர்களுக்கு மௌனம் மூலமாகவே உபதேசம் செய்வதாகச் சொல்லியுள்ளார். அச்செயலை இங்கே, பாபா மக்கள் பலர் முன்னே நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
தெளிவும் அமைதியும் பெற்ற காகாஜி சில நாள் தங்கிய பின் தேவிக்கு பூஜை செய்யும் பொறுப்பு இருந்ததால் பாபாவின் அனுமதியோடு வணிக்குச் சென்றார்.
பாபா இதைப் போன்று பற்பல அடியவர்களை சீரடிக்கு இழுத்து ஆசிர்வதித்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். அவ்வப்போது இழுக்கப்பட்டவர்களை பாபா சிட்டுக் குருவிகள் என்று அழைப்பார். இச்செயலானது பாபா தமது பூத உடலை விடுத்த பின்பும் இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது. நாம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தால் சாய்ராம் எப்போது வேண்டுமானாலும் இழுத்துக் கொள்வார்.
பாபா எனும் வெள்ளம் நம்மை அடைய வேண்டுமானால் நாம் உள்ளம் உருகி வழிய விடும் கண்நீரை நிறுத்தக் கூடாது.
பாபாவைப் பணிவோம்! பிறவிப்பயன் பெறுவோம்!
******