குருவுடன் மூன்று நாள் பயணம் 

குருவுடன் மூன்று நாள் பயணம் 

குருவுடன் மூன்று நாள் பயணம் 

சொ. அகஸ்டின்.


நமது குரு யோகி ஶ்ரீராம்பாபா அவர்களின் குரு பூஜ்ய ஶ்ரீ ராமாசாது அவர்களின் 130 வது ஜெயந்தி விழா குடந்தை, கொட்டையூர் சாதனா நிகேதன் ஆசிரமத்தில்  நடைபெறும் விழாவிற்கும் கோவை உத்சவ் பிரசாந்தியில் குருவின் “ஆத்மஞான” சத்சங்கமமும் நடைபெற இருப்பதால் இரு நிகழ்சியிலும் கலந்து கொள்வதற்காக குருவுடன் மூன்று நாள் பயணமாக  நண்பர் பாலாஜியுடன் நானும், திரு. இராஜசேகர் அவர்களும் பயணிக்க ஆயத்தம் ஆனோம் 

11.02.2025 அன்று காலை 5.00 மணியளவில் புறப்பட்டு மதியம் 2.00 மணிக்கு கோவை சென்றடைந்தோம். மறுநாள் 12.02.2025 காலை குருவின் சொற்பொழிவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கினில் மெத்த படித்தவர்கள் அமர்திருந்தனர். குரு தனது “ஆத்மஞான” சத்சங்கத்தை தொடங்கினார். நேரம் செல்ல செல்ல அமர்திருந்தவர்களை அமைதி கவ்வியது குருவின் ஒவ்வொரு சொல்லும் அவர்களை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. 

அதை இருக்கையின் நுனியில் அமர்ந்து கவனித்ததை வைத்து எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. சத்சங்கம் முடிந்ததும் தியானம் எப்போது தொடங்கும் என்று அமைதி காத்திருந்தது தொடங்கியதும் அரங்கத்தையே அமைதி கவ்விக்கொண்டது. தியானம் முடிந்ததும் அவரவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் சிலர்  தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை கேட்டு ஆசியும் பெற்றனர்.மதிய உணவிற்காக கேன்டீன் சென்றபோது அனைவர் நாவும் குருவின் சத்சங்கத்தைப் பற்றியே கிசு கிசுத்ததை எங்களால் கேட்க முடிந்தது. 

இதே நிகழ்சி மாலை 4.00 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் முன்பைவிட ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் காலையில் நடைபெற்றது போல் அல்லாமல் குரு வேறொரு கோணத்தில் அவர்களிடம் ஆத்மஞான சத்சங்கம் செய்து குழப்பத்தில் தள்ளினார். அக்குழப்பதிலிருந்து வெளிவர ஒவ்வொருவராக கேள்விகளை கேட்க வைத்தார். அவற்றிற்கு விளக்கம் அளித்ததை அனைவரும் ஆச்சர்யத்தோடு கேட்டு மகிழ்ந்தனர் . சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் கேள்வி பதில் நடைபெற்றது இறுதியாக தியானம் மற்றும் ஆசி வழங்கி நிகழ்சியை முடித்து வைத்தார். 

மறுநாள் 13.02.25 தனி தனியாக ஆலோசனை பெறுவதிலும் ஆசி பெறுவதிலும் மும்முரம் காட்டியதால் காலை 11.00 மணிக்கு நிகழ்சி தொடங்கப்பட்டது. மேலும் குரு அவர்கள் குடந்தை செல்வதை புரிந்து கொண்ட நிர்வாக குழு மதியம் 1.00  மணிக்கு  நிகழ்சியை முடித்துக்கொண்டனர். அதை தொடர்ந்து Association சார்பாக குருவிற்கு பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்தி, ஆசி பெற்று வழியனுப்பி வைத்தனர். அவற்றை ஏற்றுகொண்ட குரு அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி விடைபெற்றார்.

கோவையிருந்து புறப்பட்டதும் ஒரு சில மணி நேரங்களில் குருவின் கைபேசி ஒலித்தது திரு.நாராயணன் அவர்கள் குடந்தை ஆசிரமத்திற்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டு அறிந்தார். இரவு 8.00 மணிக்கெல்லாம் வந்துவிடுங்கள் என்றார் ஆனால் நாங்கள் செல்வதற்கு இரவு 11.00 மணி கடந்தவிட்டது. அந்நேரத்திலும் நமது குருவை வரவேற்க ஆசிரம காப்பாளர் வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.

குருவை கண்டதும் முகமலர்நது நமஸ்காரம் செய்து ஆகாரம் அளிக்க ஆயத்தம் ஆனார் நாங்கள் வரும் வழியில் உணவருந்திவிட்டோம் என்பதை அவரின் மனம் நோகாமல் குரு எடுத்துக்கூறினார். பரவாயில்லை முதலில் ஓய்வெடுங்கள் மற்றதை காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறிக்கொண்டே  ஆசிரமத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்ததை காண்பித்து இங்கு படுத்துறங்குங்கள் நாளை  காலை சந்திப்போம் என கூறி சென்றார்.

காலை 4.00 மணிக்கு வள்ளலாரின் அகவல் பாராயணம் ஒலி பெருக்கியின் மூலம் ஒலித்தது நாங்கள் எழுவதற்கு முன்பே குரு புறப்பட்டு தயாராக இருந்தார். காலை கடன் முடித்து குளித்துவிட்டு 6.00 மணிக்கு கிளம்பி வெளியே வந்து பார்கிறோம். ஓர் சிறார் பட்டாளமே பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். 

ஆசிரமத்தில் தங்கி பயின்று வரும் மாணாக்கர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது ஆசிரமத்தில் ஒழுக்கம்  எவ்வாறு பயிற்று விக்கப்படுகிறது என்பதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் அனைவரின் நெற்றியிலும் திருநீறு அலங்கரித்திருந்தது. அவ்வைபிராட்டி சொன்ன “நீரில்லா நெற்றி பாழ்” என்ற ஒற்றை வரி நினைவுக்கு வந்தது. 

நமது குருவின் குருவான பூஜ்ய ஶ்ரீ ராமாசாது அவர்களின் குரு பூஜை நிகழ்சி தொடங்கியதும் ஆசிரமத்தால் இயங்கப்படும் மேல் நிலை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சீடர்கள் என அவர்களே முன்னின்று அகவல் படிப்பதும் பூஜை செய்வதும் காலை சிற்றுண்டி பரிமாறுவதும் என அனைத்து வேலைகளையும் அவர்களாகவே முன்னின்று செய்ததை என்னால் மறக்க இயலாது. 

பூஜை தொடர்ந்து நடைபெற வெளியே இருந்து பொது மக்களும் வி.ஐ.பி களும் வந்த வண்ணம் இருந்தனர். திரு. நாராயணன் அவர்கள் வந்ததும் நமது குருவிடம் ஆசி பெற்று மதிய உணவிற்கு அணைக்கரையில் அமைந்துள்ள எமது இல்லத்திற்கு வரவேண்டும் என மிக பணிவுடன் வேண்டுகோள் வைத்தார்.

அவரின் விருப்பத்தை நிறைவேற்ற குரு இசைந்தார். காலை 12 மணிக்கு அணைக்கரை புறப்பட்டோம். குருவின் வருகையை எதிர்பார்த்து நாராயணன் குடும்பத்தார் காத்திருந்தனர். மதியம் 1 மணிக்கு அவரது இல்லம் சென்றோம் குருவை கண்டதும் திரு.நாராயணன் குடும்பத்தார் மலர்கள் பூத்து குலுங்கியது போன்று முகமலர்ந்து வரவேற்றார்கள். 

குறிப்பாக அவரின் தாயார் சுமார் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் நிமிர்ந்து நடக்க முடியாத சூழலில் அமர்ந்த நிலையிலேயே குருவை வரவேற்றார். குருவிற்கு பாத பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அம்மா ஒவ்வொன்றாக சொல்ல மகன் நாராயணன் அதன்படியே செய்தார் வீட்டில் உள்ள அனைவரும் குருவிற்கு பாத பூஜை செய்து ஆசி வாங்கி சென்றனர். இறுதியாக தாயார் அவர்கள் நடக்க முடியாத சூழலிலும் மெல்ல அடி மேல் அடி வைத்து முனுமுனுத்தபடி பாதபூஜை செய்தார்கள். என் செவிகளை தீட்டி கூர்ந்து கவனித்தேன். எங்கள் வீட்டிற்கு பாபா வந்துவிட்டார், பாபா வந்துவிட்டார் எனக் கூறிக் கொண்டே பாத பூஜை செய்தார்.

தயார் நிலையில் வைத்திருந்த உணவு தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது தேவைக்கு அதிகமாகவே சாதமும் கூட்டு பொறியலும் பரிமாறப்பட்டது அவர்களுடைய உபசரிப்பும், அன்பும் குருவிற்கும், எங்களுக்கும்  ஆனந்தம் அளித்தது. உணவிற்குப்பின் திரு. நீலவண்ண நாராயணன் அவர்கள் குருவை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். 

அங்கு ஒரு அடியில் ஜம்பொன் சிலை ஒன்றை  காண்பித்து அதை தூக்கி பாருங்கள் என்றார் குருவும் தூக்கிப் பார்த்துவிட்டு மிக கனமாக இருக்கிறது என்றார். இந்த சிலை 25 ஆண்டுகளுக்கு முன் தவத்திரு ராமதாஸ் அண்ணா அவர்கள் கொடுத்ததை நினைவு கூர்ந்து அதே ஆண்டு இங்கு வந்து அண்ணா மதிய உணவு சாப்பிட்டதையும் பாத பூஜை செய்ததையும்  பகிர்ந்து கொண்டார். இன்று உங்களை கண்டது அவரை காண்பது போலவே இருந்தது அவராகவே காட்சி அளிக்கிறீர்கள் என்றும் கூறினார்.

குரு சில விளக்கங்களை கூறினார். ராமதாஸ் அண்ணா அவர்கள் எனக்கும் குரு உங்களுக்கும் குரு. அவர் உடல்தான் மறைந்தது. அவர் மறையவில்லை.ஆனால் நீங்கள் எல்லாம் அவர்  மறைந்துவிட்டதாக நம்பிவிட்டீர்கள். ஆனால் நான் இன்றும் அவரோடு பயணம் செய்கிறேன் இப்போதும் பயணிக்கிறேன் என கூறி மேலும் பல விளக்கங்களை சொல்லி அதே அறையில் தியானத்தில் அமர்த்தி தீட்சையும் கொடுத்து ஆசி வழங்கினார்.

மீண்டும் நான் இங்கு வரும் வரை இப்பயிற்சியை தொடரவேண்டும் என்று கட்டளையாகவும் கூறினார். இந்நிகழ்வு களை கண்காணித்து கொண்டிருந்த எங்களை குரு அவ்வறைக்குள் கூப்பிட்டார் அந்த சிலையை காண்பித்தார் அது வேறுயாறுமில்லை பகவான் சாய் பாபாவின் ஜம்பொன் சிலை. ஒரே நேரத்தில் தாய்க்கு பாபா வாகவும் மகனுக்கு ராமதாஸ் அண்ணாவாகவும் நமது குரு காட்சி தந்ததை மறக்க முடியாது. எல்லாம் குரு எல்லாமே குரு! குரு வாழ்க! குருவே துணை.

***