ஆத்மஞானம் என்றால் என்ன?

ஆத்மஞானம் என்றால் என்ன?
ஆன்மீகத்தின் உயர் நோக்கமாக சொல்லப்படும் கருத்து என்னவென்றால் பிறப்பு இறப்பு தளைகளை அறுத்து ஆத்மஞானம் பெற்று வீடுபேறு எய்துவதே என பல ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இதில் ஆத்மஞானம் என்பது என்ன என்று பல ஆன்மீக மேதாவிகளுக்குத் தெரிவது இல்லை.
வெறுமனே சடங்குகள் செய்வதும், வேள்வி இயற்றுவதும், உருவ வழிபாட்டு முறைகளும் ஆத்மஞானத்தைப் பெற்றுத்தராது, அப்படியானால் இவை வெறும் காலக் கழிவும், பணச் செலவுமே ஏற்படுத்துகின்றன என்று சொல்லலாம். அப்படியானால் ஆத்மஞானம் என்றால் என்ன?
ஆத்மஞானம் என்றால் “தன்னையுணர்தல்” ஆகும். ஆனால் இப்பூமியில் வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னைக் காண பழகாமல் பிறரைக் காண்பதுவே பழகிப் போன இயல்பாக உள்ளது. குறிப்பாக “நான் யார்” என்பதைத் தவிர மற்ற அனைத்தையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
நீங்கள் மிகப் பலவற்றை அறிய விரும்புகிறீர்கள் ஆனால் ஒருபோதும் உங்களை அறிய விரும்புவதில்லை. இப்பூமியில் உமது உடலுக்கு மிக நெருக்கமான ஒன்று உண்டென்றால் அது "ஆன்மா” வாகும். ஆயினும் நீங்கள் ஒருபோதும் உமது ஆன்மாவை அறிய விரும்புவதில்லை.
அது தான் இங்கு வருந்தத்தக்கதாக உள்ளது, பகவான் இரமண மகரிஷி போன்ற உயர்ந்த ஆத்மஞானிகள் “திருவண்ணாமலையில் இருந்து கொண்டே திருவண்ணாமலையைப் பற்றி அறியாதது போன்றது உன்னை நீயே அறியாதது ஆகும். என்று கடிந்து கொள்கின்றார்கள்.
ஆத்மஞானம் என்பது காட்சிப்பொருளற்ற தன்மையைக் கொண்ட ஒரு நிலையை குறிக்கின்றது. அதாவது ஒருவர் தமக்குள்ளேயே தனது ஆன்மாவையே சிந்தித்தபடி, வேறு எந்த புறுஉலக சிந்தனையின்றி இருப்பதாகும்.
நம்மிடம் அறிவார்ந்த சிந்தனைகள் ஆயிரம் இருந்தும் நமது மனம் கற்பனையான உணர்ச்சிக்குத்தான் அடிமையாகும். ஆன்மாவின் அறிவுசார்ந்த மிக உயர்ந்த தத்துவம் என்னவென்றால் “நான் ஆன்மா” நான் என்று சிந்திப்பதாகும். ஆனால் நம் மனம் “நான் உடல்” என்றே சிந்திக்கும்.
நம்மிடம் மனதிற்குரிய அறிவு சார்ந்த செயல்திறன்கள் பல உள்ளன. ஆயினும் நீங்கள் உமது மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான செயல்திறன்களை எப்போதும் புற உலக காட்சிப் பொருள்களிடத்தில் உணர்ச்சிவயப்பட்டு இழந்துவிடுகின்றீர்கள்.
ஆனால் உங்களுடைய மனத்துக்குரியதும் அறிவுசார்ந்ததுமான எல்லா சக்திகளையும் ஒருக்கினைத்து உமது ஆன்மாவை நோக்கித் தூண்டி வழிநடத்தி, எந்த புற உலகப் பொருளோடும் தொடர்பு கொள்ளாமல் அமைதியுடன் இருப்பீர்களானால் அந்த நிலையே ஆத்மஞானமாகும்.
இதுவே மெய்யான ஞானமாகும் ஏனென்றால் ஆன்மாவை அறியும் அறிவைத் தவிர பிற அறிவுகள் யாவும் நம்முடைய சொந்த அறிவல்ல! தன்னை அறிதல் மட்டுமே சுய அறிதல் ஆகும் இதுவே ஆத்மஞானமாகும். இந்த ஆத்மஞானத்தைப் பெற ஒருவர் பல நூல்களைப் படிக்கத் தேவையில்லை. ஒருவர் இந்த ஆத்மஞானத்தை அடைய நேர்மையான உந்துதலை வளர்த்துக் கொண்டாலே போதும்.
அதோடு பரம்பொருளிடத்தில் பக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். இதுவே தியானம் ஆகும். மேலும் இந்த செயல்முறையில், தன்னையுணர்தலுக்கு பின்னே ஒருவர் வீடுபேறு என்னும் மோட்சத்தை அடைகிறார்.
சகல சாஸ்திரங்களையும், புராணங்களையும் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை விட்டுவிட்டு, ஆத்மாவே சத்தியமாகிய பரப்பிரம்ம் என்று அறிந்து ஆத்மதியானம் செய்து கொண்டு இருக்க வேண்டும். ஸ்நானம், சந்தியா வந்தனம், ஜபம், தபம். ஹோமம், நியமம், யாகம், தீர்த்தயாத்திரைகள் முதலாகிய ஸத்கர்மங்களைச் செய்வதனால் தத்வஞானம் உண்டாகாது. அதனால் ஆத்மாநுபவத்தை ஒருபோதும் அடையமுடியாது.
"சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை யறியுமோ"
சுவையூட்டும் உணவுகளை சமைத்து அதில் கரண்டியைப் போட்டு வைத்தால் கரண்டியும் சட்டியும் உணவின் ருசியை அறியுமா?
அதைப் போல சகல சாஸ்திரங்களையும் வாசித்து பண்டிதன் என்று பெயர் பெற்ற போதிலும், குருவின் அருளால் வேதாந்த சாஸ்திரங்களைக் கேட்டு தத்துவஞான பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து அடுத்தவருக்கு பயிற்றுவிக்கும் நிலையை அடைந்தாலும் “நான் யார்” என்ற ஆத்மாநுபவம் அடையாவிட்டால் அப்படிப்பட்டவன் முட்டாள் அல்லவா?
"நட்ட கல்லு பேசுமோ நாதனுள் ளிருக்கையிலே" என்றபடி இருதய கமலத்திலிருக்கும் ஆத்மதேவதையைத் தெரிந்து கொள்ளாமல் வேறோரிடத்தில் தெய்வமிருக்கிறதென்று தேடுபவர்கள் கையில் இருக்கும் நெய்யை விட்டுவிட்டு வெண்ணையை தேடுபவர்கள் அல்லவா?
அமிர்த்தை குடித்தவனுக்கு சாதாரண நீர் பெரிதாகத் தெரியாதல்லவா? அதைப் போல் வேதாந்த விசாரணையினாலும் குருவினாலும் ஆத்மஞானம் அறிந்தவனுக்கு வேதங்களினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புரியும்.
ஆன்மீக அறிமுகமே இல்லாதவர் ஆரம்ப காலங்களில் ஆன்மீக நூல்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் அதில் தவறு இல்லை. ஆனால் கடைசிவரை நூல்களை படித்தபடியே இருந்துகொண்டு அதற்கான பயிற்சியை சிறிதும் மேற்கொள்ளலாமல் அல்லது நூலில்கற்றபடி இலக்கை எய்தாமல் விட்டால் என்ன பயன் உண்டு என்று சொல்லுங்கள்?
பதஞ்சலி மாமுனிவர் "யோக: சித்தவிருத்தி நிரோத:" என்ற கொள்கையைக் கைக் கொண்டு சிந்திப்பதை நிறுத்தி மனஅடக்கம் செய்யப்பட வேண்டும் என்கிறார். அவ்வாறான செயல் ஆத்ம ஞானத்தை, ஆத்மஅனுபவத்தை தரும் என்கிறார். வெறுமனே நூல்களை மட்டுமே ஓதிக்கொண்டு அறிவுப் பழமாக இருந்தால் மனம் அடங்கவே அடங்காது, சித்தம் அடங்கவே அடங்காது என்பதால் ஒரு கட்டத்தில் நூல் ஓதுவதையும் நிறுத்தி ஆத்ம ஞானம் பெறும் பொருட்டு சிந்திப்பதை நிறுத்தவேண்டும் என்கிறார்.
அவரது கொள்கைப்படி அது சரியானதே.
மேலும் அத்துவைதமா? அல்லது துவைதமா? என்ற கருத்திற்கு பகவான் ரமணருடைய கருத்து இங்கு சிந்திக்கத் தக்கதாக அமைவதை நோக்க வேண்டும். அவரிடம் ஒரு அன்பர் இறைவன் அத்துவைதமா? துவைதமா? என்று கேட்டதற்கு முதலில் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள் பின்னர் அது அத்துவைதமா? துவைதமா? என்று அறிந்து கொள்ளலாம். ஆன்மாவையே அறிந்து கொள்ளாதவருக்கு அத்துவைதம், துவைதம் என்ற கேள்வி எங்கே எழுகின்றது என வினாவுகிறார்.
இதுவே நமது தேடலுக்கான கேள்விக்கும் விடையாக அமையலாம். ஆத்மஞானம் ஒருவரை எல்லாம் அறிந்தவராக ஆக்குகிறது. எல்லாம் அறியும் போது இறைவன் அத்துவைதமா? துவைதமா? என்பது தெரியாமலா போய்விடும். ஆகவே முதலில் ஆன்ம ஞானத்திற்கு முயலுவோம் பின்பு நாம் வேண்டும் விடை நமக்கு தானாகக் கிடைத்து விட்டும்.
தேவையில்லாமல் ஆன்மிகத்தில் குழந்தை நிலையில் உள்ள நாம் ஏன் தத்துவ தருக்கத்தில் ஈடுபடவேண்டும். அறிவு ஒருபோதும் நம்மை ஆன்மீக முன்னேற்றத்தில் கொண்டு போய்விடாது. அதன் பயன் ஒரு வரம்போடு முடிந்துவிடுகின்றது. அது நமக்கு விட்டுச் செல்வதெல்லாம் கேள்விகளை மட்டுமே.
இறைவன் அறிவினால் தெரிந்து சொல்லுதற்கு இயலாதவன். ஆகவே முதலில் ஆன்மாவை உணர்வோம்.
அனைத்திலும் நிறைந்திருப்பது ஆத்மாதான் என்ற ஞானம் பிறக்கும் போது என்ன ஆகிறது? எல்லாமே புனிதம் அடைகின்றன. உன்னுள் இருப்பதும், என்னுள் இருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் வந்து விட்டால், நீ என்னை விட உயர்ந்தவனும் இல்லை, என்னை விட தாழ்ந்தவனும் இல்லை.
நீ எனக்கு எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், கறுப்பன், சிவப்பன், அரசன், ஆண்டி, குரு, சீடன் என்ற அனைத்துவித பேதங்களும் மறைந்து போகும். எல்லாம் சரி நிகர் சமானம் என்ற சமநோக்கு ஏற்படும்.
நீ என்னில் இருந்து வேறு பட்டவன் என்ற எண்ணம் வரும் போது. அன்போ பகையோ வருகிறது. நீ என்னில் இருந்து வேறு பட்டவன் அல்ல என்ற ஞானம் வரும் போது, பகைமை அழிகிறது. எனக்கு நான் பகைவனா? எனக்கு நான் நண்பனா?
நான் நானாக இருக்கிறேன். எனக்கு நான் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை.
எல்லாம் ஆத்மா தான் என்ற எண்ணம் வரும்போது அனைத்து செயல்களும் நின்று போகும். போற்றுவதும் இல்லை, தூற்றுவதும் இல்லை.
மேடு பள்ளம் இருந்தால், தண்ணீர் மேட்டில் இருந்து பள்ளத்திற்கு ஓடும். தரை சமப் பட்டால் நீர் ஓட்டம் நின்று போகும். ஆத்ம ஞானம் ஏற்படும் போது, கர்ம வினை நின்று போகும். பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை.
ஆத்மஞானம் அறிவோம்!
அமைதியுடன் வாழ்வோம்!
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
***