குருவுடன் ஓர் நாள் - சொ.அகஸ்டின்

குருவுடன் ஓர் நாள்  - சொ.அகஸ்டின்

குருவுடன் ஓர் நாள்

சொ.அகஸ்டின்


கடந்த 08.03.25 சனிக்கிழமை மதியம் குருஞ்செய்தியில் 09.03.25 ஞாயிறன்று தியான வகுப்பு ரத்து செய்யப்படுகிறது என்ற தகவலை படித்ததும் குருவிடம் அலைபேசி வாயிலாக தகவலை கேட்டறிந்தேன். சொந்த வேலை காரணமாக தான் பிறந்த திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயகனூர் செல்வதாக கூறினார். ஊர் பேரை கேட்டதும் குருவைத் தேடி புத்தகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் என் நினைவுக்கு வந்தது. 

ஆர்வமிகுதியால் சொந்த வேலை என்று சொன்னதையும் மீறி நானும் உங்களோடு வரட்டுமா என்று கேட்டேன். சிறு தயக்கத்திற்கு பின்னரே சரி என்றார் குரு. கூடவே நண்பர் ராஜசேகரையும் அழைத்துக் கொள்ளலாமா என்றேன் அப்போதும் யோசித்தே சரி என்றார். அவர் சொந்த வேலைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது என் சிந்தை முழுவதும் குரு பிறந்த ஊராகிய அம்மைநாயக்கனூரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது

சென்னையில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு தொடர்ந்து  பயணித்து ஓர் உணவகத்தில் இரவு உணவு அருந்தினோம். அப்போது குரு அவர்கள் செல்லும் வழியில் சமயபுரம் கோவிலில் இரவு தங்கிவிட்டு விடியற் காலையில் திண்டுக்கல் செல்லலாம் என்று கூறினார். நண்பர் ராஜசேகரோ மதுரை சென்று தங்கிவிட்டு காலை புறப்படலாம் என்று மாற்று யோசனையைக் கூறினார்.

குரு என்பவர் நாம் தொட முடியாத உயரத்தில் இருந்தால்தான் குருவின் மதிப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்பது எண்ணவோ உண்மைதான் என்பது அப்போது எங்களால் உணரமுடியவில்லை. ஏன் என்றால் குரு எங்களுடன் சகஜமாக உண்டு,உரையாடிக் கொண்டிருப்பதால் அவர் கூறும் சூட்சும விசயங்களை நாங்கள் கவனிக்க தவறுகின்றோம் என்பதை பின்னால் குரு கூறியதும்தான் உணர்ந்தோம்.

குரு கூறியபடி சமயபுரத்தில் இரவு தங்கியிருந்தால், குருவிற்கும் சமயபுரத்திற்கும் உள்ள தொடர்புகளை நிறைய கூறியிருப்பார். நாங்கள் அதை தவறவிட்டுவிட்டோம். ஏன் என்றால் சமயபுரத்தாள் எனது தாய் என்று அடிக்கடி குரு கூறுவார். குருவின் குணம் என்னவென்றால், அவர் கூறும் ஒரு விசயத்தை நாம் மறுத்துவிட்டால் பிறகு அதைப்பற்றி பேசவோ, வற்புறுத்தவோ மாட்டார்.

ஆகவே நாங்கள் குருவின் பேச்சில் உள்ள சூட்சுமத்தை அறியாமல் சமயபுரத்தை தாண்டி தொடர்ந்து பயணித்து விடியற்காலை திண்டுக்கல் வந்து விட்டோம். காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டுச் செல்லாம் என்று பல தங்கும் விடுதிகளில் சென்று முயற்சி செய்து பார்க்கின்றோம். அன்று முகூர்த்த தேதி என்பதால் எங்குமே அறை காலியாக இல்லை. 

எனவே வாடிப்பட்டி பேருந்து நிலையம் சென்று, காரிலேயே சற்று ஓய்வெடுத்துக் கொண்டு,  அங்கேயே குளித்து முடித்து விட்டு ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.அங்கிருந்து அம்மைநாயக்கனூர் மிக அருகில் தான் உள்ளது. 

குருவும் எனக்கு ஊருக்குள் காலை பத்து மணிக்குத்தான் வேலை. அதற்கு இன்னும் 4 மணிநேரம் இருக்கின்றது. ஆகவே நாம் இப்போது நான் தவம் செய்த சிவன் கோவில், கஞ்சா சாமியார் மடத்திற்கும் அழைத்துச் செல்கின்றேன். வாருங்கள் என்று கூற நாங்களும் சூடாக ஒரு தேனீர் அருந்திவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

எங்கள் குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” புத்தகத்தில் தேடல் 33 ல் குறிப்பிட்டிருக்கும் மலையாள சுவாமி தங்கியிருந்த சிவன் கோவிலுக்கு  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒத்தையடி பாதையாக சிறு குன்றின் மீது ஏறிதான் செல்ல முடியும் என்று பதிவு செய்திருப்பார். ஆனால் இப்போது குன்றை சுற்றிக்கொண்டு ஒரு வாகனம் செல்லும் அளவிற்கு பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கரடுமுரடான பாறைகள் நிறைந்த அப்பாதை வழியாக யானை அசைந்து செல்வது போல் எங்கள் வாகனம் மெல்ல மெல்ல அசைந்து சென்றது. சிறிது தூரத்தில் எங்களை வரவேற்பது போல குடை விரித்தது போன்று ஒரு மரம் வித்தியாசமாக வளர்ந்திருந்தது. அதை கண்டதும் கோவில் அருகில் வந்துவிட்டோம் என்று குரு கூறினார். 

கோவிலை சுற்றிலும் கம்பி வேலி போட்டிருந்தார்கள். எங்களைத்தவிர அங்கு வேறு யாருமில்லை. மெதுவாக காரைவிட்டு இறங்கி நடந்தோம். மயான அமைதிக்கு இடையில்  குயிலும், சிட்டு குருவியும்  இனிமையாக கூவி எங்களை வரவேற்றன.

மலையாள சாமியாரோடு உரையாடிய நிகழ்வுகள் மற்றும் ஜீவ சமாதி அடைந்த அகோரி ஆனந்த் ஆகியோர்களை பற்றி விவரித்துக் கொண்டே சன்னதி அருகில் உள்ள ஓர் நீரூற்றைக் காண்பித்து இந்த நீரூற்றில் இருந்துதான் தண்ணீர் சேகரித்து அருந்துவோம் என்றார் குரு. தரைதளத்தில் இருந்தது இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் பீடம் அமைத்து கம்பி வேலி போட்டிருந்ததால் அத்தண்ணீரை எங்களால் பருக முடியவில்லை.

கோவிலை சுற்றி வரும்போது நமது குரு, அவரது குருவின் நினைவாக பிரதிஷ்டை செய்திருந்த நாகர்சிலையை காண்பித்தார். பீடத்தின் மேல்  கம்பீரமாக காட்சி கொடுத்தார் நாகராஜா. அவரை வணங்கிவிட்டு அதன் அருகே ஓர் பாறையில் குருவுடன் சிவன் கோவிலில் அவரது அனுபவங்களைப்பற்றி ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். 

நாங்கள் அங்கு பேசிக்கொண்டிருந்த இரண்டுமணி நேரத்தில் அங்கு எங்களைத்தவிர வேறு யாரையும் காணோம். இந்த காலத்திலும் இப்படி இருக்கிறது. நமது குரு அங்கு தவம் புரிந்த மூப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆள் நடமாட்டமே இருந்திருக்காது அல்லவா? அப்படிப்பட்ட இடத்தில் குருவும், மலையாள சுவாமியும் மட்டும் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

இதையெல்லாம் கேட்கும் போது அங்கிருந்து புறப்பட மனம் இசைந்து கொடுக்கவில்லை நேரமின்மை காரணத்தால் புறப்படலாம் என்று எழுந்து கொண்டோம். அப்போது  சற்று தூரத்தில் இரண்டு மயில்கள் ஒன்றோறொன்று குதூகலித்து கொண்டிருந்தன அதில் ஒரு மயில் தோகையை விரித்து ஆடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோவிலை விட்டு வெளியே வந்ததும் குடை மரத்திடம் நின்று தூரத்தில் இருந்த சிறுமலையை காண்பித்து அதோ அந்த மலை உச்சியில் தான் மலையாள சாமியாரின் ஆணைக்கிணங்க இரவாதம் செய்வதற்காக சென்று வந்தேன் என குரு விவரித்தார்.

பல இரகசியங்களை உள்ளடக்கி சாந்தமாக காட்சியளித்த சிறுமலையை பார்த்துக்கொண்டே மெதுவாக கடந்து வந்தோம். வரும் வழியில் கஞ்சா சாமியார் சமாதியை தரிசித்து அம்மைநாயக்கனூர் ஊர் உள்ளே நுழைந்தோம். குருவின் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் குருவிற்கு நமஸ்காரம் செய்து வரவேற்றார்கள் சிலருக்கு புன்சிரிப்பும், சிலருக்கு மௌனமும் பரிசாக அளித்தார் குரு அவர்கள்.

சிறிது நேரம் கழித்து குருவின் சகோதரர் எங்களை தேனீர் கடைக்கு அழைத்துச் சென்றார் பின்னர் அவர் சொந்தமாக நடத்திவரும் வியாபார நிறுவனத்தை காண்பித்தார். ‌பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குருவின் கரங்களால் திறந்துவைக்கப்பட்டது இன்று இரண்டு கடையாக இணைத்து பெரிய ஸ்டோராக மாற்றம் அடைந்திருக்கின்றது என அதன் விரிவாக்கத்தை கூறி ஆனந்தப்பட்டார் குருவின் சகோதரர்.

பிறகு அருகே உள்ள பெருமாள் கோவிலை சுட்டி காட்டினார் குரு அவர்கள். தேடல் 33 ல் சிறுமலைக்கு செல்வதற்காக விடியற்காலை காத்திருக்கும் போது பெரியவருடன் உரையாடலும் மலையாள சாமியாரை கண்டதும் ஓட்டம் பிடித்தை குருவைத்தேடியில் படித்தது நினைவுக்கு வந்தது.

அங்கிருந்து புறப்பட்டு குருவின் உறவினர் வீட்டை ஒவ்வொன்றாக காட்டினார் சகோதரர். அவரை இடைமறித்த நண்பர் ராஜசேகர் அனைவருக்கும் வீடு இருக்கின்றது எங்கள் குருவும் இங்கு தானே பிறந்தார் அவருக்கான இடம் இருக்குமே அது எங்கு உள்ளது என வினவினார்? இது தான் என்று உறுதியாக கூறவில்லை அவர். ஆனால் இங்கு தான் தங்குவார் என கூறி ஒரு சிறு காலிமனையை காண்பித்தார். 

ஆனால் அவ்விடத்தில் தான் குருவின் பூர்வ ஜென்ம பிறவி முருகையா அவர்கள் தவம் புரிந்து சமாதியான இடம் என்றும், அம்மனைக்கு எதிரே சிறிய காலி மனையும் இருந்தது. அதில்தான் நாகர் படமெடுத்து முருகையாவை தரிசித்த இடம் என்றும் குருவைத்தேடியில் தான் பதிவுசெய்திருப்பதாக குரு அவர்கள் எங்களுக்கு விளக்கினார்கள். 

ஊருக்குள் இவ்விரண்டு இடம் மட்டுமே காலி மனைகளாக உள்ளன. வந்த வேலை முடிந்து புறப்படும் போது குருவின்  தங்கையின் வீட்டை காட்டினார்கள்.  அதைப்பார்த்ததும், அவ்வீட்டு மொட்டை மாடியில் குரு தூங்கி கொண்டிருக்கையில் வீட்டு வாசலில் நடுநிசியில் மாட்டு வண்டியில் சிறு பிள்ளைகள் விளையாட அதில் ஒரு பெண்மணி மட்டும் குருவை கீழே குதி என்று சொன்னதும்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. (இதை தேடல் 32 ல் குறிப்பிட்டிருப்பார்)

மாட்டு வண்டி நின்ற இடத்தில் எங்கள் வாகனம் நின்று கொண்டிருந்தது . அவ்விடத்தின் எதிரே குருவிற்கு தீட்சை அளித்த நாகராஜா இருந்த வீட்டையும் பார்த்தோம். நாங்கள் அங்கே உள்ளே நுழைய முடியாத சூழல்.குரு வந்திருப்பதை தெரிந்து கொண்ட  சடையம்மா வெளியே வந்து குருவை வரவேற்றார்கள். சடையம்மாவை பார்த்தது ஆனந்தமாக இருந்தது.

நாகராஜவே அவர் தலைமேல் இருப்பது போல் முடி தோற்றம் அளித்தது. சிறிது நேரம் குருவிடம் பேசிவிட்டு அன்போடு வழியனுப்பி வைத்தார்கள். மிக மிக அற்புதமான பயணம். எங்கள் குரு பிறந்த ஊரையும், அவர் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் நிகழ்ந் இடங்களையும் எங்கள் குருவுடனேயே சென்று பார்த்தது எங்களது கொடுப்பினை என்று தான் கூற வேண்டும். எங்களது குருவிற்கு மிக்க நன்றி!

குரு வாழ்க! குருவே துணை!

*****