பெங்களூர் சத்சங்கம்

பெங்களூர் சத்சங்கம்
திருமதி. மாதங்கி பாலாஜி.
குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்களுடைய சத்சங்கம் மற்றும் தியானம் பெங்களூரில் கடந்த 19.04.2025 அன்று நடைபெற்றது. குருவுடன் நான் 36 மணி நேரங்கள் இருந்த தருணம்! இதுவரை அவருடன் சில மணிநேரங்கள் மட்டுமே செலவழித் திருக்கிறேன். இந்த 36 மணிநேரமும் இதுநாள் வரை நான் உணராத குருவை உணர்ந்து கொண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த ஆண்டு நானும் திரு. சுந்தர் சாயியும் பெங்களூர் சென்றிருந்த போது பலர் குருவை நேரில் சந்திக்க ஆர்வமாக இருந்தனர். அவரை கட்டாயம் அங்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை அன்று நிறைவேறியது.
18.04.2025,வெள்ளிக்கிழமை அன்று சென்னையிலிருந்து பெங்களூருக்கு நான், எனது கணவர் பாலாஜி மற்றும் குழந்தைகளுடன் குருவை அழைத்துக் கொண்டு காலை 5.45 மணிக்குப் புறப்பட்டோம். முதலில் குருவின் அத்யந்த சிஷ்யையான திருமதி. கெளரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய இல்லத்துக்குச் சென்றோம்.
வழி முழுவதும் குருவுடன் சம்பாஷனைகள் செய்து கொண்டே வந்ததால், ஆனந்த களிப்பில் பயணக் களைப்பு துளிகூட இல்லை. மேலும் 11.30 மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று நாங்கள் அவர்களிடம் கூறியிருந்தாலும், 10.45 க்கே விரைவாக சென்று விட்டோம். பெங்களூர் வாகன நெரிசலுக்கு பெயர்போன இடம் என்பதால், அனைவரும் குருவின் அனுக்கிரகத்தினால் விரைவாக, எந்தவித சிரமும் இல்லாமல் வந்தடைந்ததைப் பற்றிப் பேசி பூரித்துப் போனோம்.
நாங்கள் அங்கு சரியாக வரும் நேரம் கேட்டு குருவை சந்திக்க இன்னொரு தம்பதி வேறு ஒரு இடத்திலிருந்து வந்தனர். அவர்கள் தங்கள் சந்தேகங்களை குருவிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு, தியானம் செய்துவிட்டு கிளம்பினர். பின்னர் நாள் முழுவதும் குரு திருமதி.கௌரி மற்றும் அவர்களுடைய மகள், திருமதி. அபிநயா மற்றும் மருமகனுக்கு ஆத்மஞான போதனைகள், அவர்களின் தனிப்பட்ட சந்தேகங்கள் மற்றும் தியானம் செய்து அற்புதமான அனுபவங்களை அளித்தார்.
ஸாயிபாபாவின் பரமபக்தர்களான அவர்கள் அன்று குருவை பாபாவாகவே பார்த்ததாகக் கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அன்றிலிருந்து அவர்களின் பாரம் வெகுவாகக் குறைந்து லேசாக இருப்பது போல உணர்ந்ததாகக் கூறினர். அன்று இரவு உணவை அவர்களது வீட்டிலேயே முடித்துக் கொண்டு, நாங்கள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பினோம்.
18ஆம் தேதி இரவு திரு. ஆனந்த் திருமதி. பிரகதி அவர்களுடைய இல்லத்தை அடைந்தோம். அன்று காலையிலிருந்து எங்கள் வரவுக்காக ஆவலாகக் காத்திருந்த அவர்கள், குருவுக்கு ஆரத்தி எடுத்து, பூ தூவி வரவேற்றனர். திரு. ஆனந்த் அவர்களுடைய தாயார் குருவை நமஸ்கரித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
இரவு சுமார் 10 மணிக்கு அங்கு சென்றடைந்த நாங்கள், விடிய விடிய சத்சங்கம் செய்து கொண்டே இருந்தோம். நானும் என் கணவரும் சோர்வடைந்து உறங்கச் சென்றுவிட்டோம். ஆனால் குருவிடம் சிறு களைப்பு கூட இல்லை. அவர் எப்போது உறங்கச் சென்றார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு யோகி காலை பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கு விழித்துக் கொள்வார் என்று குரு கூறியதற்கிணங்க, அவர் 4.30 மணிக்கே எந்தவித சோர்வும் இல்லாமல் எழுந்து கொண்டு, நான் 6.30 மணிக்கு எழுந்து வரும்போது எப்போதும்போல பளிச்சென்று வெண்ணிற ஆடையுடன், திருநீறு தரித்துக் கொண்டு புன்னகை புரிந்தார்.
அள்ள அள்ள குறையாத ஊற்றான குருவின் ஞான போதனைகளையும், அவருடைய வாழ்க்கை அனுபவங்களையும் பருகிக் கொண்டே இருந்தோம். காலை உணவை முடித்துக் கொண்டவுடன் சத்சங்கத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அனைவரும் குருவை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு ஆர்வமாக அமர்ந்து கொண்டனர்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் சத்ய சாயியின் பக்தர்கள் என்பதால் சத்சங்க நிகழ்ச்சி பஜனை பாடல்களுடன் தொடங்கியது. அப்போது குரு சத்யசாயியைப் போன்றே பாடல்களை ரசித்துக் கேட்டார். பிறகு அனுமன் சாலிஸா பாடினர். பின்னர் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சத்சங்கம் ஆரம்பமானது.
முதலில் நான் குருவின் யோக சக்திகள் பற்றியும், அவரின் போதனை முறைகள் பற்றியும், அவரின் மெய்ஞ்ஞானப் பாதை பற்றியும் அனைவருக்கும் அறிமுகம் செய்தேன். அடுத்து அவர்கள் குருவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவுடன், குரு பேசத்தொடங்கினார்.
அன்று குருவுக்கு, ‘சரணாகதி (Surrender)’ என்கிற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. பேச்சு தொடங்கி அரை மணிநேரம் ஆகியும் அவர் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசாமல் வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பது எங்களுக்கு (நான், பாலாஜி, ஆனந்த்) பதட்டத்தை உண்டாக்கியது. இருப்பினும் நாங்கள் எதுவும் கூறவில்லை.
இதை உணர்ந்து கொண்ட குரு, ‘யாரோ நான் சரணாகதி பற்றி பேச மறந்துவிட்டேன் என்று நினைக்கிறீர்கள். நான் மறக்கவில்லை. ஏதேதோ மாற்றி பேசிக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றி துளி கூட நான் கவலைப்படவில்லை. அதுதான் சரணாகதி’ என்று அனைவருக்கும் புரியும்படி சரணாகதி தத்துவத்தை எடுத்துக்காட்டாக எளிமையாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவ்வாறு சுமார் 1.45 மணிநேரம் நீடித்த சத்சங்கத்தின் நடுவே சிலரின் மனதில் பல நாட்களாக செய்து கொண்டிருந்த பிரார்த்தனைகளை, அவர்கள் கூறாமலேயே அவர்களிடம் கூறி அவை நிறைவேறும் என்று ஆசி வழங்கினார். சீரடி ஸாயி , அக்கல்கோட் மஹராஜ் , மஹாபெரியவா போன்ற மகான்கள் இதுபோல லீலைகள் நிகழ்த்தியதை நான் படித்தும் எழுதியும் இருந்ததை அன்று நேரில் கண்டு பூரித்துப் போனேன். என்னே பாக்கியம் செய்தவள் நான்!
சத்சங்கம் நிறைவடைந்தவுடன், தியானம் தொடங்கியது. அப்போது குரு அவர்கள் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தார்கள். “உங்களது ஏதாவது ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் நினைத்துக் கொண்டு, இன்று நான் கற்றுக் கொடுக்கும் தியான முறையில் தொடர்ந்து 9 நாட்கள் தியானம் செய்யுங்கள். அது கண்டிப்பாக நிறைவேறும். அப்படி நிறைவேறவில்லை என்றால், என்னை தொடர்பு கொண்டு கேளுங்கள்” என்று கூறினார். அனைவரும் ஆர்வத்துடன் பிரபஞ்ச தியானம் செய்யத் தொடங்கினர்.
தியானம் நிறைவடைந்தது. அவரவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி நாங்கள் கூறினோம். சிலருக்கு வார்த்தைகள் வராமல் கண்ணீர் பெருகியது. வயதில் மூத்தவர் ஒருவர் இதுவரை நான் இவ்வாறு தியானத்தில் உணர்ந்ததே இல்லை என்று சிலாகித்தார். ஒருவர், என் குருவை கண்டுபிடித்து விட்டேன், ‘நீங்கள்தான் என் குரு’ என்று கூறினார். இதுபோல ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமாக, அவரவர்களுக்கு ஏற்றாற்போல இருந்தது.
மெய்ஞ்ஞானியான நம் குரு ஒருபோதும் தன்னை வேறொரு குருவாகக் கூறிக் கொண்டதில்லை. அவர் எப்போதும் ‘இறைவன் இல்லை. இறைத்தன்மை நிச்சயமாக இருக்கிறது’ என்று கூறுவார். அன்று அவர் இறைத்தன்மையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தந்த இடங்களின் அதிர்வலைகளுக்கு ஏற்றாற்போல் அவரின் தன்மை மாறி அவரவர்களுக்கு ஏற்றாற்போல் காட்சி அளித்திருக்கிறது. ஒரு மகானை பிச்சைக்காரனாக பார்த்தவர்களும் உண்டு, மகானாக பார்த்தவர்களும் உண்டு அல்லவா!
பின்னர் குருவுடன் தனிமையில் சிலர் சம்பாஷணை செய்து தங்கள் தனிப்பட்ட சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டனர். மீண்டும் வர வேண்டும் என்கிற நிபந்தனையுடன், மாலை சுமார் 3.30 மணிக்கு குருவை விட்டு பிரிய மனமில்லாமல், அனைவரும் எங்களுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
வழிநெடுக சத்சங்க நிகழ்ச்சியைப் பற்றியும், அங்கிருந்தவர்களின் சத் எண்ணங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே, இரவு சுமார் 10 மணிக்கு நாங்கள் சென்னை வந்து சேர்ந்தோம். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த குருவுக்கு மனமார நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, அவர் பாதம் பணிகிறேன்.
குரு வாழ்க!!
குருவே துணை!!