பரம்பொருள் சாயி

பரம்பொருள் சாயி

பரம்பொருள் சாயி

பரம்பொருளாகிய சீரடி சாயி பாபா அண்ட பேரண்டங்களிலும் வியாபித்திருக்கிறார். தான் அவதரித்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுலகில் வந்து குறிக்கோள் நிறைவேறியதும் பூதவுடலைத் துறந்து வரையற்ற பண்புக் கூற்றையடைந்தார். அவர் அழியும் இவ்வுடலைத் துறந்தாலும் உயிருள்ளவை மற்றும் ஜடப்பொருட்கள் எல்லாவற்றிலும் நிலைபெற்று அவைகளைக் கட்டுப் படுத்துகிறார். 

சாயியை சரணாகதி அடையும் பக்தர்களும், முழுமனதாக அவரை வணங்குவோரும் அனுபவப்பூர்வமாக இதை உணர்கிறார்கள். சாயிபாபா சர்வவியாபி. பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர். அவர் எல்லா உயிர்களிடமிருந்தும் அன்பைத் தவிர வேறெதையும் விரும்பவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த பாபா பூதவுடலைத் துறக்கும் முன் கீழ்கண்ட புனிதமான அமுத மொழிகளைக் கூறினார் .

“நான் இறந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள். எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும். என்னிடம் முழுமையாக சரணடைபவர்களுடன் எனது சமாதியும் பேசும்  தொடர்பு கொள்ளும்”.

“நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள்”.

“என்னையே எப்போதும் நினைவு கூருங்கள். உள்ளம் உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்”

“யார் ஷீரடி மண்ணில் கால் வைத்தாலும் அவரது துன்பங்கள் முடிவுக்கு வந்துவிடும். உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும். நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள்”.

“என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ அவன் எப்போதும் என்னை காண்கிறான். இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கின்றவனுக்கு  நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலையை (தன்னை உணர்தல்) அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்”.

“புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது. விவேகம் என்னும் சாரதியைக் கொண்டு  மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளை தாறுமாறாக அலைய விடாமல் இருக்க வேண்டும்”.

“என்னை நினைவில் கொண்டிருப்பவர்களை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எவர் என்னை அன்புடன் கூப்பிடுகிறாரோ, அவரிடம் ஓடி சென்று வெளிப்படையாகக் கலந்து கொள்கிறேன்”.

“எவரொருவர் பிறர் மீது குறை கூறி குற்றம் கண்டு குதர்க்கம் செய்கிறாரோ அவர் என்னை காயப் படுத்துகிறார். ஆனால் எவர் மிகப் பொறுமையுடன் இருக்கிறாரோ அவர் என்னை அதிகமாக சந்தோஷப்படுத்துகிறார்”.

“எவன் என்னை அறிந்து கொள்ள முற்படுகின்றானோ, அதற்கு முன்னால் நான் அவனது வீட்டிற்கு வந்து விடுவேன்”.

யாருடைய பாவங்களெல்லாம்  மறக்கப் படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என்னை வணங்கும் பாக்கியத்தை பெறுவார்கள்.

பாபாவே ஒரு மனிதரை அழைத்தாலன்றி அவரருகில் யாருமே செல்ல முடியாது. சீரடிக்கு வருவது,அங்கு தங்குவது, கிளம்புவது அனைத்துமே பாபாவின் விருப்பப்படிதான் நடக்கும்.

என்னுடைய கதைகளை கவனமாக கேளுங்கள். அவைகளைப் பற்றி நினையுங்கள்.எனது  ஆசி இல்லாமல் என்னுடைய  கதைகளை கேட்கும் பாக்கியம் யாருக்கும் கிடைக்காது.

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே. நீ துவாரகாமாயியின் குழந்தை. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.

அற்புதங்கள் பல புரியும் சாயிநாதனின் திருவடிகளை வணங்குவோம்.

***