தியானமும், சேவையும்.

தியானமும், சேவையும்.

தியானமும், சேவையும்.

மதியை அமைதியாக வைத்திருப்பதே ஆன்மிகத்திற்கான ஆதாரத் தகுதி! மதி ஏன் அமைதியாக இல்லை? அது தொடர்ந்து எதையாவது சிந்திக்கிறது! ஒரு செயல் செய்வதற்கு முன் அந்தச் செயலின் பலனை கற்பனை செய்து கொள்கிறது! அந்தச் செயலின் முடிவை எதிர்பார்க்கிறது! 

மதி என்றால் மனமும் அறிவும் சேர்ந்தது. நிலாவிற்கும் மதிக்கும் சூட்சும ரீதியாக நிறைய தொடர்பு இருக்கிறது! ஆகவே தான் நிலாவிற்கும் மதி என்று மற்றொரு பெயர்! வளர்பிறை மதியை சிவபெருமான் தலையில் வைத்திருக்கிறார். அறிவை பூரணமாக்குவதே சிவபூரணத்தின் செயல்! பௌர்ணமி, அமாவாசை தினங்களில் மதியாகிய மனம் நிலாவின் அதிர்வலை களை  உள்வாங்குகிறது. ஆகவே தான் சிறப்பு ஆன்ம தியானங்களை மகான்கள் முன்மொழிகின்றார்கள்.  

பௌர்ணமி தியானம் மிகுந்த பலன் அளிக்கிறது! சாயி பக்தர்கள் தியானம் பழக வேண்டும்! தியானமே தேவையில்லை பரஸ்பர அன்பே போதுமானது என்றால் ஒற்றைச் சிறகை வைத்துக்கொண்டு பறவை பறக்க முடியுமா? சக மனிதர்களோடு சிநேகம் புரிய இயலாமல் - தயங்கித் தயங்கி நாம் தோற்றுப் போய்க் கொண்டே இருக்கிறோம்! 

மனதளவிலே தான் நமது அன்பு இருக்கிறது. மதி அளவில் தான் பகவான் பாபாவின் கோட்பாடு இருக்கிறது. ஆனால் நமக்கு செயல் அளவில் இல்லை! 
நாம் பிறரை ஏமாற்றுவதாக நினைத்து நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆக மதியை தெளிவடையச் செய்யாமல் ஒருகோடி சாயி சஹஸ்ரநாமம் சொல்லினும், சாயி சத்சரித பாராயணம் செய்தாலும், ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி பாதுகாப்பது போலத்தான் உங்களது ஆன்மிக ஞானம். 

ஆனால் ஞானியோ எந்த விவகாரத்தின் போதும் கூட மதியை அமைதியாக வைத்திருப்பார். வெளிப்புறச் செயலில் எதைச் செய்யினும் மதியின் அமைதியே முக்கியம்! சேவை என்பது வெளிப்புறத்தில் நீங்கள் காட்டும் அன்பு. தியானம் என்பது உட்புற அன்பின் மலர்ச்சி. உள்ளே அன்பில்லாமல் வெளியே எப்படி அன்பு பிரதிபலிக்கும்.

மூன்றாவது உலகப் போரை வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். அது ஏற்கனவே நம் மனதிற்குள் நிகழ்ந்த வண்ணமாய் இருக்கிறது! அந்த எண்ணப் போர்களை வெற்றிக் கொள்வதற்கு, மதியை அமைதி அடையச் செய்வதற்கு பகவான் பாபாவின் ஆன்மிகத்தில் தியானமும் சேவையும் இரண்டு சிறகுகள்! இன்னும் யாருமே உயர ஆரம்பிக்கவே இல்லை! நாம் வெறும் காகிதப் பட்டங்களையே பறக்க விட்டு அவற்றையே காவியங்கள் என கற்பனை செய்து கொண்டிருக்கின்றோம்.

*